ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்கள்

3


வாஷிங்டன்: ரஷ்யா உடனான பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், அதிபர் டிரம்ப்பை நாளை (18ம் தேதி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து ஐரோப்பிய தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சர்வதேச நாடுகள் உற்றுநோக்கிய, 'அமைதியை நோக்கி' என்ற பெயரிலான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையிலான நேரடி சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைனுடனான போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் ஏற்படவில்லை.

டிரம்பை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்
ரஷ்ய அதிபர் புடினுடனான கூட்டத்துக்கு பின், அது பற்றி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன், அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

இது பற்றி ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் தந்துள்ளது. நாளை வாஷிங்டன் வந்து நேரில் சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தார். போர் நிறுத்தம் பற்றி அதில் பேசுவோம்,” என்றார்.


முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் ஜெலன்ஸ்கி உடன் ஐரோப்பிய தலைவர்களும் உடன் வருகின்றனர்.


கடந்த பிப்ரவரி மாதம் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிபர் டிரம்ப், துணை அதிபர் வேன்ஸ் இருவரும், ஜெலன்ஸ்கியை அவமதிக்கும் வகையில் பேசினர். அப்போது நடந்ததுபோன்று மீண்டும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஐரோப்பிய தலைவர்களும் ஜெலன்ஸ்கியுடன் செல்கின்றனர்.

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லியென், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், நேடோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோரும் ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து டிரம்பை சந்திக்கின்றனர்.


ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக உர்சுலா வான் டெர் லியென் கூறியுள்ளார்.

Advertisement