ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில், தனியார் பள்ளி ஆசிரியையிடம் முகவரி கேட்பது போல் நடித்து, தாலி செயினை பறித்துச் சென்ற திருச்சியை சேர்ந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஜெரால்டு மனைவி அஞ்சலின் நிர்மலா மேரி, 58; உப்பளம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த ஜூலை 30ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். மூலக்குளம் பாவேந்தர் நகரில் வந்தபோது, எதிரே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அஞ்சலின் நிர்மலா மேரியை நிறுத்தி, முகவரி கேட்டுள்ளனர்.

அதற்கு, நிர்மலா மேரி பதில் அளித்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். அஞ்சலின் நிர்மலா மேரி அளித்த புகாரில், ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், தமிழக போலீசார் உதவியுடன், ஆசிரியையிடம் தாலி செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சி, புத்துார், அத்துமண்டை தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கோபி (எ) கோவிந்தராஜ், 30; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 சவரன் செயின் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் திருச்சியை சேர்ந்த சங்கரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் மீது, கொள்ளை, வழிப்பறி, பைக் திருட்டு என, தமிழக பகுதி போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரு முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

Advertisement