கர்நாடகா அணைகளில் இருந்து 95,000 கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கேஆர்எஸ் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீரும் என மொத்தம் 95,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 14,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அணையில் இருந்து 70
ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 117.5 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 120 அடி. அணைக்கு வினாடிக்கு 7382 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement