ஒரு வேளை உணவுக்கு கூட போதாத 33 ரூபாய் சம்பளம்; கோயில் பூஜாரிகள் வேதனை

66

பல்லடம்: ''கோயில் பூஜாரிகளுக்கு தினசரி வழங்கப்படும் 33 ரூபாய் சம்பளம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட போதாது' என கோயில் பூஜாரிகள் நலச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.


அதன் மாநில தலைவர் வாசு தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:




தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 19,000 கோயில்கள் ஒரு கால பூஜை
திட்டத்தின் கீழ் உள்ளன.



இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு மாத சம்பளமாக 1000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. அதாவது தினசரி 33 ரூபாய்; இன்றைய விலைவாசியில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட இந்த தொகை போதாது.



துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலுக்குட்பட்ட கோயில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஓய்வுக்குப்பின் துறை சார்ந்த ஓய்வூதியம், பொங்கல் கருணைக்கொடை, பி.எப்., உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உள்ளன.



ஆனால் ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வேலை பார்ப்பவர்கள், 'மாற்றாந்தாய் பிள்ளைகள்' போல் கருதப்படுகின்றனர்.



பணி நிரந்தரமும் செய்யப்படாமல் பணிக்காலத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தேவையான ஊதியமும் கிடைக்காமல் அர்ச்சகர்கள், பூஜாரிகள் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.



இவர்களது மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணி நிரந்தரம் செய்வதுடன் ஓய்வூதியம், பி.எப்., மற்றும் குடும்ப நல நிதி ஆகிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement