பயன்படுத்தாத 4,300 ஏக்கர் நிலம்: வீட்டுவசதி வாரியம் விடுவிப்பு

சென்னை: வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலங்களில், பயன்படுத்தப்படாத, 4,300 ஏக்கர் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, அத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அமைச்சர் அளித்த பேட்டி: வீட்டுவசதி வாரியத்தால், 40 முதல் 45 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு திட்டங்களுக்கு நிலம் எடுக்க, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டு, முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. இதனால், அந்த நிலங்களை வாரியத்தால் பயன்படுத்த முடியவில்லை. உரிமையாளரும், அதன் மீது முழுமையான உரிமையை எடுக்க முடியவில்லை. இது பல ஆண்டுகளாக உள்ள பிரச்னை.

பல நேரங்களில் மனுக்கள் பெறப்பட்டு, பலவிதமாக ஆய்வு செய்தும் பிரச்னைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. இது, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து, என்னென்ன வகையில் நிலங்கள் இருக்கின்றன என, வீட்டுவசதி துறை வாயிலாக பிரித்து பார்க்கப்பட்டது. உத்தேசமாக, 10,000 ஏக்கருக்கு மேல் இருப்பது தெரிந்தது. அந்த நிலங்கள், ஐந்து வகையாக பிரிக்கப்பட்டன. அதில் ஐந்தாவது வகை, வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமானது. இதில், 1 மற்றும் 2 வகைகளில், 4,300 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. மேலும், 3 மற்றும் 4ல் உள்ள நிலங்கள் தொடர்பாக, ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement