பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர்

11


காசா: ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது.இதில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 75 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.


இந்த போர் காரணமாக காசாவில் முதல்முறையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு அமைப்பு(The Integrated Food Security Phase Classification (IPC) ) ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. காசா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பஞ்சம் நிலவி வருவதாகவும், அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டெயின் அல் பலா மற்றும் கான் யூனிஸ் நகரிலும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பஞ்சம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. காசாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமை, பட்டினி மற்றும் மரணம் என்ற அபாய நிலையில் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொள்ளை



இதனிடையே காசா நகரில் வசிக்கும் காடா அல் கவுர்ட் என்ற பத்திரிகையாளர் கூறியதாவது: உணவு, குடிநீர் மற்றும் அ த்தியாவசிய மருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. ஆனால், அவை கொள்ளையடிக்கப்படுவதால் ஏழை மக்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு கிடைப்பது இல்லை. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் இங்கு வெளியேறுவது சிக்கலாக உள்ளது. அவர்களுக்கு தேவையான பணமும் இல்லாத நிலையில் உள்ளனர். எப்போது பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம், துப்பாக்கி சத்தம் கேட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டச்சத்து குறைபாடு



காசா நகரில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ப்பணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மிரட்டல்



இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியதாவது: இஸ்ரேலின் நிபந்தனைப்படி ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், அவர்களுக்கு நரகத்தின் வாசல் திறக்கப்படும். அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஹமாஸ் அமைப்பினரின் தலைநகரான காசாவை ரபா மற்றும் பெயின் ஹனூன் போல் மாற்றுவோம் என தெரிவித்தார். இந்த இரு நகரங்களும் இஸ்ரேல் தாக்குதலில் இடிபாடுகள் குவிந்த நகரமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement