தி.மு.க., ஆட்சியில் 15,380 மூட்டை அரிசி வீணடிப்பு; இபிஎஸ் குற்றச்சாட்டு

2

மதுராந்தகம்; திமுக ஆட்சியில் 15,380 மூட்டை அரிசி வீணாகி விட்டதாக தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.



மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று(ஆக.22) செய்யூர் தொகுதியை அடுத்த மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது/;


திமுக ஆட்சியமைத்து 51 மாதம் முடிந்து 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆனால், இந்த ஆட்சியின் சாதனை மக்களுக்கு சோதனை தான். விலைவாசி விண்ணை முட்டிவிட்டது, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.


மளிகைக் கடையில் விலைவாசி புள்ளிவிவரம் வாங்கி வந்து பேசுகிறேன், மளிகைப் பொருட்களின் விலை அத்தனையும் உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் மக்களுக்குக் கொடுத்தோம்.


நானும் 1989ல் எம்.எல்.ஏ. ஸ்டாலினும் 1989ல் எம்.எல்.ஏ. நான் வந்தது வேறு வழி. தலைவர்கள் பேச்சைக் கேட்டு உழைத்து வந்திருக்கிறேன். அப்படி ஸ்டாலின் உழைத்து வந்தாரா..? குடும்பம் மூலம் வந்திருக்கிறார். நான் அப்படியல்ல படிப்படியாக உழைத்து வந்தேன். மக்களோடு மக்களாக வாழ்ந்தவன். நான் இன்றுவரை விவசாயம் செய்கிறேன், விவசாயியை யாரும் எதுவும் செய்ய முடியாது.


தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் 2022ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1538 டன் அரிசி மூன்றாண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் வீணாகிவிட்டது, அதை கோழி கூட சாப்பிடாது. 1538 டன் என்றால் 15,380 மூட்டை அரிசி வீணடிக்கப்பட்டுவிட்டது.


அதிமுக ஜனநாயகம் உள்ள இயக்கம், உங்கள் இயக்கம். யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement