கழிவுநீராக மாறிய மழைநீர் கால்வாய் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

உளுந்தை:உளுந்தை பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், மழைநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறி துர்நாற்றம் வீசுவதால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை வழியே, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதிமக்கள், நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி மப்பேடு, பேரம்பாக்கம், தக்கோலம் சென்று வருகின்றனர். நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில் சாலையோரம் உள்ள வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய்களை சீரமைத்து, கழிவுநீர் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement