ரேசன் கடையை உடைத்து அரிசி ருசித்த கொம்பன்

பந்தலுார்: பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் ரேசன் கடையை, 3-வது முறையாக உடைத்து அரிசியை ருசித்த கொம்பன் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று தனியாக உலா வருவதுடன், ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள், குடியிருப்புகளை உடைத்து அரிசி உட்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளது.

இந்த யானை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர், மேங்கோரேஞ்ச் என்ற இடத்தில் தேயிலை தொழிற் சாலை மற்றும் எஸ்டேட் அலுவலர்கள், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ரேஷன் கடையின் கதவுகளை உடைத்து ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரையை ருசித்து சென்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ரேஷன் கடைக்கு வந்த யானை கதவை உடைத்து அரிசி மூட்டையை வெளியே எடுத்து சாலையில் போட்டு சேதப்படுத்தி ருசித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவால வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனக் குழுவினர், அப்பகுதிக்கு வந்து, யானையை துரத்தி உள்ளனர்.

அதனை கண்டுகொள்ளாத யானை, வெளியே எடுத்த அரிசி முழுவதையும் உட்கொண்ட பின்னரே, அங்கிருந்து சென்றது.

இப்பகுதியை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement