பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு கடல கொல்லியில் பகுதியில் பட்டாதாரர்களுக்கு நிலம் ஒப்படைப்பு

பந்தலுார்: பந்தலுார் அருகே கடலக்கொல்லி கிராமத்தில், தனியார் வசம் இருந்த நிலம், கோர்ட் உத்தரவுபடி நில அளவை செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 20 -அம்ச திட்டத்தின் கீழ், கடந்த, 1976ம் ஆண்டு பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 10 பேருக்கு, கடலகொல்லி கிராமத்தில் தலா ஒரு ஏக்கர் வீதம், மாநில அரசின் சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு அப்போதைய, மாவட்ட கலெக்டர் இன்பசாகரன் பயனாளிகளுக்கு நில பட்டா வழங்கினார். ஆனால், குறிப்பிட்ட பட்டா நிலம் தனியார் வசம் இருந்ததால், பட்டா பெற்ற பயனாளிகள் நிலத்திற்கு செல்ல முடியாத நிலையில் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவு பெற்ற நிலையில், 'பட்டா பெற்றவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிலத்தை, நில அளவை செய்து ஒப்படைக்க, கூடலுார் நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார். தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக நில அளவை செய்யப்பட்டு, தற்போது வாரிசுதாரர்களாக உள்ள, 5- பேருக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், 'குறிப்பிட்ட நிலத்தில் தனிநபர்கள் வீடுகள் கட்டியும், அரசின் அங்கன்வாடி மற்றும் சமுதாய கூடம் அமைக்கப்பட்டுள்ளதால், அதனை அகற்றுவது குறித்து பயனாளிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிற து. அதில் தீர்வு கிடைத்தால், நீண்ட கால பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்,' என்றனர்.

Advertisement