தேர்வு முடிவுகளை விட உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

13

பனாஜி: "தேர்வு முடிவுகள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல. கடின உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்," என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் பேசினார்.

கோவா மாநிலம் மிராமரில் உள்ள வி.எம்.சல்கோகர் சட்டக் கல்லுாரி பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் கலந்துகொண்டார்.

அவர் பேசியதாவது: தேர்வு முடிவுகள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல, நமது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியம். நான் சட்டக்கல்லுாரியில் படிக்கும் போது கடைசி வருடத்தில் பாதி நாட்கள் தான் வகுப்பறைக்கு சென்றிருப்பேன்.

நான் இங்கு 2 ஆண்டுகள் படித்தேன். பனாஜியில் இருந்த இடங்களை பற்றி பல அற்புதமான நினைவுகள் எனக்கு உள்ளன. இந்த கடற்கரை எங்களுக்கு அப்போது, இந்தக்கல்லுாரி வழங்கிய அற்புதமான சட்ட நுாலகத்தை விட மிகவும் ஈர்த்தது. அதன்பிறகு அமராவதிக்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கு படித்து தேர்ச்சியாகும் போது, தேர்ச்சி பட்டியலில் 3வது இடத்தில்தான் நான் இருந்தேன். ஆனாலும் நான் சிறந்த மாணவராக இருந்தேன். எனது நண்பர் 2வது இடத்தில் இருந்தார். முதலிடம் பெற்ற மாணவர், ஒரு குற்றவியல் வழக்கறிஞராக மாறி, ஜாமினில் மட்டுமே நிபுணத்துவம் பெற்றார்.

2வது இடம் பெற்றவர் நேரடி மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். நான் 3வது இடத்தில் இருந்தேன். வழக்கறிஞராக இருந்து, இன்று நான் நாட்டின் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்.


இதன் மூலம் நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், தரவரிசை என்ன என்பதை பொறுத்து செல்ல வேண்டாம். தேர்வு முடிவுகள் நீங்கள் எந்த வெற்றியை அடைவீர்கள் என்பதை தீர்மானிக்காது. நமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புதான் வெற்றியை தீர்மானிக்கும்.

இவ்வாறு பி.ஆர் கவாய் பேசினார்.

Advertisement