நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு:மணப்பாக்கம், படாளம் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் ஊராட்சியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல், நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்குபின், தனியார் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் வாங்கி செல்கின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மணப்பாக்கம் ஊராட்சி பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேபோல் மதுராந்தகம் அடுத்த, படாளம், எல்.என்.புரம் கிராமங்களில், நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் வருவாய் துறை, வேளாண்மை துறை ஆகியோர் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்,

வெள்ளப்புத்துார் ஊராட்சியில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஏரி பாசனத்தின் மூலமாக, 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சொர்ணாவாரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை செய்யப்பட்ட நெற்களை நெற்களம் மற்றும் வீடுகளில் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக, எதிர்பாராத நேரங்களில் மழை பெய்து வருவதால், களத்துமேட்டில் உள்ள நெற்களை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement