8 ஆண்டுகள் கழித்து டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு

புதுடில்லி; புதுடில்லியில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.



தலைநகர் டில்லியில் மெட்ரோ ரயில் சேவையானது கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானது. கடைசியாக 2017ம் ஆண்டு டிக்கெட் விலை திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.


தற்போது கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து டிக்கெட் விலையை மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டண உயர்வானது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.


திருத்தப்பட்ட கட்டண விகிதத்தின்படி, பெரும்பாலான வழித்தடங்களில் குறைந்தது ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ.4 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. விமான நிலைய விரைவுப் பாதையில் ரூ.5 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


குறைந்தபட்சமாக டிக்கெட் கட்டணம் ரூ.11 முதல் ரூ.44 ஆக இருக்கிறது. 32 கிமீ தொலைவுக்கு அதிகமான பயணதூரம் என்றால் கட்டணமானது ரூ.60 என்பதில் இருந்து ரூ.64 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.


கட்டண உயர்வு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், பராமரிப்பு, ரயில் இயக்க செலவு, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட காரணங்கள் டிக்கெட் விலையை உயர்த்த காரணமானதாக கூறி உள்ளது. ஆனால் கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement