சிறுமழைக்கே குளமாக மாறிய திருமழிசை சிப்காட் சாலைகள் கலெக்டர் உத்தரவு என்னாச்சு ஆபிசர்ஸ்?

திருமழிசை:திருமழிசை சிப்காட்டில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டனர். இதனால், சிறுமழைக்கே குளமாகிய சாலையால், தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருமழிசை சிப்காட்டில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், தொழிற்சாலைக்கு வருவோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில், தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 2024 ஜூலை 18ம் தேதி, அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர், திருமழிசை சிப்காட்டில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காதவாறு கால்வாய்கள் துார்வாரவும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டா ர்.

கலெக்டர் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இன்று வரை கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் பெய்த சிறு மழையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது.

இதனால் , தொழிற்சாலைக்கு வரும் வாகனங்கள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, தொழிலாளர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மு தல்வர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், தமிழக சிப்காட் பரிதாபமான நிலையில் இருப்பது, தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம், சிப்காட் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement