தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்

ஆர்.கே.பேட்டை:தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்வெளியில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கட்டுகள் வீணாகின.

ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, ஒரே நாள் இரவில், 12 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 8 செ.மீ., மழை பதிவாகின. இதன் காரணமாக வயல்வெளியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

அறுவடை செய்த நெல்வயல்களில் இருந்த வைக்கோல் கட்டுகள், திடீர் மழையால் நனைந்து வீணாகியுள்ளன. கடந்த கோடை காலத்தில், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் வைக்கோல், பஞ்சம் ஏற்பட்ட போது, ஒரு கட்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, அறுவடை முடிந்துள்ள நெல் வயல்களில், வைக்கோல் கட்டுகள் தண்ணீரில் நனைந்து வீணாகியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement