நீர்வளத்தை குன்ற செய்யும் அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு 

சென்னை: 'தென்பெண்ணை துவங்கி தாமிரபரணி வரை, ஆறுகளை மாசுபடுத்துவது தான், தமிழகத்தின் பொற்கால ஆட்சியா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தொழிற்சாலைகளின் கழிவுநீரை, தென் பெண்ணையாற்றில் கலந்து விடுவதால், துர்நாற்றத்துடன் நுரை பொங்கி, கரையில் ஒதுங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணாடி போல, தண்ணீர் தளும்பிச் செல்ல வேண்டிய தமிழக ஆறுகளும், ஏரிகளும், தி.மு.க., அரசின் அலட்சியத்தால், கழிவு நீர் கால்வாய்களாக மாறி விட்டன.

தென் பெண்ணை ஆற்றின் அவல நிலையை, தி.மு.க., அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட்ட பிறகும், அதை கண்டு கொள்ளாமல், தி.மு.க., அரசு மாசுபடுத்துகிறது. எதிர்கால தலைமுறையின், குடிநீர் தேவையை தீர்க்க கூட, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தமிழகத்தில் நீர்நிலைகள் இருக்காது. தென்பெண்ணை துவங்கி தாமிரபரணி வரை, அனைத்து ஆறுகளையும் மாசுபடுத்தி, நீர்வளத்தை குன்ற செய்யும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலமா. வெட்கக்கேடு. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement