கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது; மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ்

12

சென்னை: கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை 26ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு, வருமான வரி விலக்கு, அங்கீகாரம், பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, நட்சத்திர பிரசார நியமனம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை போட்டியிடச் செய்ய வேண்டும்.

ஆனால், கோகுல மக்கள் கட்சி, இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கடந்த 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்கவில்லை.

கட்சி பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை தலைமை தேர்தல் அலுவலகத்தில் வரும் ஆக.,26ம் தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement