ஒரு லாரிக்கு உரிமை கோரிய இருவர் திண்டிவனம் போலீசில் பரபரப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஒரு லாரிக்கு இருவர் உரிமை கோரியதால், போலீசார் யாரிடம் லாரியை ஒப்படைப்பது என்று திணறினர்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள செ.கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன், 21; இவருக்கு சொந்தமான லாரியை (டிஎன்18-ஏஒய் 0826), கதிர்வேல் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கடந்த 4.12.2023ம் தேதி கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் வாடகை கொடுத்து வந்த அவர், பின்னர் வாடகை தரவில்லை. இது குறித்து கேட்டபோது, லாரியை சதீஷ் என்பவரிடம் கொடுத்துள்ளதாக கதிர்வேல் கூறினார்.

இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசில் கடந்த 28.3.2024ல் சரவணன் புகார் கொடுத்தார். இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி, சென்னை பூந்தமல்லி சுங்கச்சாவடியில் தனது லாரி நிற்பதாக திண்டிவனம் போலீசில் சரவணன் கூறினார். அதையடுத்து, லாரியை திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த லாரி தன்னுடையது என பெரம்பலுாரை சேர்ந்த சசிகுமார் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும், அந்த லாரிக்கான ஆர்.சி.புக் உள்ளிட்ட ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், லாரி தன்னுடையதுதான் என்றும், லாரியின் இன்ஜினில் உள்ள நெம்பர் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்து, லாரியை தன்னிடம் வழங்க கோரினார்.

அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து லாரியை தங்கள் கஸ்டடிக்கு நேற்று மாலை கொண்டு வந்தனர்.

லாரியை, திண்டிவனம் கோர்ட்டில் போலீசார் இன்று ஒப்படைக்க உள்ளனர். கோர்ட்டில் ஆவணங்களை சமர்ப்பித்து, லாரி யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என போலீசார் கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.

Advertisement