சத்தீஸ்கர் - மஹாராஷ்டிரா எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை


காட்சிரோலி: சத்தீஸ்கர் - மஹாராஷ்டிரா எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய அரசு, மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்லாண்டு காலமாக மாவோயிஸ்ட்கள் ஆதிக்கத்தில் இருந்த பல கிராமங்கள் மீட்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டு விட்டனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் மாநில எல்லையில் அமைந்துளு்ள வனப்பகுதியில் ஒரு சில மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை தேடிச்சென்ற படையினர், காட்சிரோலி - நாராயண்பூர் எல்லையில் உள்ள கோபர்ஷி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
அங்கு பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே 8 மணிநேரமாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதன் முடிவில், 3 பெண்கள், ஒரு ஆண் என மொத்த 4 மாவோயிஸ்டுகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரு எஸ்எல்ஆர் ரைபிளும், இரு ஐஎன்எஸ்ஏஎஸ் ரைபிள் உள்பட பயங்கர ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, மாவோயிஸ்டுகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement