இந்திய பெண்கள் நான்காவது வெற்றி * தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் அபாரம்

திம்பு: தெற்காசிய கால்பந்தில் இளம் இந்திய பெண்கள் அணி தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்றது. நேற்று பூடானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.
முதல் 3 போட்டியில் நேபாளம், வங்கதேசம், பூடானை வென்றது இந்தியா. நேற்று இரண்டாவது கட்ட போட்டிகள் துவங்கின. இந்திய அணி, மீண்டும் பூடானை எதிர்கொண்டது.
போட்டியின் 4வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஜூலன் பந்தை, பூடான் கோல் ஏரியாவுக்குள் அடித்தார். அங்கு வந்த அனுஷ்கா குமாரி, வலைக்குள்ள தள்ளி கோலாக மாற்றினார். 16 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் அசத்திய அனுஷ்கா, இரண்டாவது கோல் அடித்து மிரட்டினார்.
24 வது நிமிடத்தில் இந்தியாவின் ஸ்வேதா ராணி கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் 77வது நிமிடத்தில் இந்தியாவின் அபிஷ்தா கொடுத்த பந்தை பெற்ற கேப்டன் ஜூலன், பந்தை வலது காலால் அடித்து வலைக்குள் தள்ள, கோலாக மாறியது. கடைசி நிமிடத்தில் நிரா சானு (90+5) ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 5-0 என தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. 12 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா.

Advertisement