மூன்றாவது சுற்றில் சிந்து: உலக பாட்மின்டனில்

பாரிஸ்: உலக பாட்மின்டன் 3வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, மலேசியாவின் லெட்ஷனா மோதினர். முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-15 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என்ற கணக்கில் அயர்லாந்தின் ஜோஷுவா மேகி, மோயா ரியான் ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 22-20, 21-13 என சீனதைபேயின் குவாங் ஹெங் லியு, போ ஹான் யங் ஜோடியை வீழ்த்தியது.