இந்தியா - அமெரிக்கா பேச்சு தொடக்கம்; விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு

10


புதுடில்லி: வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய அரசு வட்டார தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்தது. இந்த வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டுள்ளது. இது வர்த்தகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அது மட்டுமில்லாமல், டிரம்ப்பின் இந்த செயல் உலக நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, அமெரிக்க மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கிளப்பியது. அடுத்தடுத்த வரி விதிப்புகளால் இருநாடுகளிடையே பரஸ்பரம் இருந்த நல்லுறவு சீர்கெட்டதுடன், அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரிவிதிப்பில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிற உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளை முழு வீச்சில் வர்த்தகத்துறை செய்து வருகிறது.

இந்த நிலையில், வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டில்லி அரசு வட்டார தகவல் வெளியாகியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பின் ஒரு பகுதி ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement