152 விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கடந்த ஆகஸ்ட் மாதம், வாகன தணிக்கை செய்து, விதிமீறிய 152 வாகனங்களுக்கு, ஒரே மாதத்தில், 22 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில், விதி மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என, விதி மீறி இயக்கிய 152 வாகனங்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டன.

இந்த வாகனங்களுக்கு, ஒரே மாதத்தில், 22 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

Advertisement