நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிப்பு

சென்னை: நாளை, 7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிடங்கள் நீடிக்கும். இதை, பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னை பிர்லா கோளரங்கில் தொலைநோக்கியில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரியன், -பூமி, -சந்திரன் போன்றவை ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரஹணம் நிகழ்கிறது. அந்த நேரத்தில், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால், அது சந்திர கிரஹணம் அல்லது நிலவு மறைப்பு என அழைக்கப்படுகிறது.
நிலவு முழுமையாக பூமியின் நிழல் பகுதியில் மறைவது, முழு சந்திர கிரஹணமாகும். நாளை இரவு முழு சந்திர கிரஹணம் நிகழ உள்ளது. இது, நாடு முழுதும் தெரியும்.
இதுகுறித்து, சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல்
இயக்குநர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
நாளை நிகழ உள்ள சந்திர கிரஹணம், 85 நிமிடங்கள் நீடிக்கும். இரவு, 8:58 மணிக்கு சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். இதை, நம் கண்களால் பார்ப்பது கடினமாக இருக்கும்.
பின்,9:57க்கு பகுதி கிரஹணமாக துவங்கும். அப்போது, சந்திரன் இருண்ட கருநிழல் பகுதிக்குள் நுழையும். அந்த கிரஹணத்தை எளிதாக காணலாம்.
இரவு, 11:01 முதல் நள்ளிரவு, 12:33 மணி வரை, சந்திரன் முழுமையாக மறையும். அதிகாலை, 1.26 மணிக்கு, சந்திரன் கருநிழல் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும். அதிகாலை, 2.25க்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். இந்த கிரஹணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் .
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், சந்திர கிரஹணத்தை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை இரவு, 9:00 மணி முதல் கிரஹணம் விடும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த கிரஹணம், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, தென்அமெரிக்காவின் கிழக்கு பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகளில் தெரியும்.
அடுத்த சந்திர கிரஹணம், 2028 டிசம்பர், 31ல் நிகழ உள்ளது. வரும் 21, -22ம் தேதிகளில் நிகழவுள்ள பகுதி சூரிய கிரஹணம், இந்தியாவில் தெரியாது. தெற்கு ஆஸ்திரேலியா, பசிபிக் தெற்கு பகுதிகள், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கட்சியின் நலனுக்காக பேசினேன், நீக்குவார்கள் என தெரியாது: செங்கோட்டையன்
-
டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை: நயினார் நாகேந்திரன்
-
அமெரிக்க நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் பிரதமர் மோடி; அமைச்சர் ஜெய்சங்கர்
-
'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாடு : கோவையில் செப்., 8, 9ல் நடக்கிறது
-
திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி
-
10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!