'உங்களுடன் ஊழல்' முகாமாக மாறிய 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
கடந்த ஜூலை 15ல் துவங்கப்பட்ட, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், இதுவரை 40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 80 சதவீத மனுக்கள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விண்ணப்பித்த ஒருவருக்குக் கூட, இதுவரை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.
மக்களுக்கு சேவை வழங்குவதை வெற்றிகரமாக செய்ய முடியாத தி.மு.க., அரசு, ஊழலை மட்டும் வெற்றிகரமாக செய்து வருகிறது.
பட்டா மாற்றம், மின் இணைப்பு கோரி பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய், மின் துறை அதிகாரிகள் கட்டாயமாக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பட்டா மாற்றம் செய்ய, நிலங்களின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக, விவசாய அமைப்புகளின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லஞ்சம் கொடுத்தால் சர்ச்சைக்குரிய இடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள், 'உங்களுடன் ஊழல்' முகாம்களாக மாறி விட்டன. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், விளம்பரங்களால் மக்களை ஏமாற்ற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது.
தி.மு.க.,வின் ஏமாற்று நாடகங்களை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

