21 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை:'வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் அதிகபட்சமாக 18 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, சென்னை மணலி புதுநகரில், 13; அரியலுார் மாவட்டம் குருவாடியில், 10; சென்னை கொரட்டூர், பாரிமுனை, எண்ணுாரில், 9 செ.மீ., மழை பெய்துஉள்ளது.

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில், செப்., 20 வரை, இடி, மின்னலுடன், மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement