ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி

கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனில் டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான்வழி குண்டுகளை வீசி ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுவனும் ஒருவன். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த தாக்குதலில் துரதிஷ்டவசமாக ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் பலத்த காயமுற்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலால்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரஷ்யர்கள் மீண்டும் நமது உள்கட்டமைப்பை குறிவைத்துள்ளனர். புடினுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
சந்திப்பு
இதற்கிடையே, இன்று உக்ரைன் பாதுகாப்பு படையினரை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மத்தியில் ஜெலன்ஸ்கி பேசியதாவது:
இன்று, உக்ரைனுக்கு சேவை செய்ததற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காகவும் உக்ரைனின் பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நமது சுதந்திரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளீர்கள். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய பிறகு,
நீங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு நமது ஒற்றுமை தான் காரணம்.
மிகவும் முக்கியமானது
பாதுகாப்பு படையினருக்கு அரசு விருதுகளை வழங்கி எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உக்ரைனுக்காகப் போராடியதற்கும், போரில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களது பணி மிகவும் முக்கியமானது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.