வனத்தில் இறந்த யானை குறித்து விசாரணை

கூடலுார்:முதுமலை, கார்குடி வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வனச்சரகம் கும்பாரை கொல்லி அருகே, கல்லல்லா பள்ளம் பகுதியில் வன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நீர்குட்டை பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். துணை இயக்குனர் (பொ) வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். உடலை முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் காட்டு யானைக்கு, 35 வயது இருக்கும். அழுகிய நிலையில் இருப்பதால் இறப்புக்கான காரணம் அறிய முடியவில்லை. ஆய்வுக்காக இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின் இறப்புக்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.

Advertisement