ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரம்; நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்

3

சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களின் போது கூட்டங்களை கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக நவ.,6ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு, தமிழக காவல் துறை அனுமதி மறுத்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்' என கெடு விதித்தது.


இதைத் தொடர்ந்து, கரூரில் நடந்தது போன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களின் போது கூட்டங்களை கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வரும் நவ.,6ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட, பார்லிமென்ட், சட்டசபையில் பிரதிநிதித்துவம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் பரிந்துரைகளின் பேரில் பொதுக் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட இருக்கிறது.

Advertisement