பீஹார் மக்கள் புத்திசாலிகள், ரூ.10 லட்சம் தந்தாலும் யோசித்தே ஓட்டு போடுவார்கள்; கார்கே பிரசாரம்

2

வைஷாலி; பீஹார் மக்கள் புத்திசாலிகள். நீங்கள் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலும் யோசித்த பின்னரே ஓட்டு போடுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறி உள்ளார்.

பீஹாரில் உள்ள வைஷாலி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் பேசியதாவது;

20 ஆண்டுகளில் உங்களால்(தேசிய ஜனநாயக கூட்டணி) காட்டாட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லையா? காங்கிரசையும், ராஷ்டிரிய ஜனதா தளத்தையும் மக்கள் இம்முறை தேர்ந்தெடுப்பார்கள்.

20 ஆண்டுகளில் மாநிலத்திற்கு எதுவும் செய்யாத நிதிஷ்குமார் இன்று இப்போது அதை செய்துவிடுவாரா? பிரதமர் மோடி, நிதிஷ்குமாரை முதல்வராக ஆக்க போவது இல்லை. தமது சீடர்களில் ஒருவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பார்.

பீஹாரை அவர்கள் நாசம் செய்துவிட்டனர்.பள்ளிகளை சீரழித்து விட்டனர், ஆசிரியர்கள் இல்லை. நாடு முழுவதும் வேலை இல்லை. காவல்துறை, ரயில்வே என பல்வேறு துறைகளில் 50 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும், ஆனால் இவர்கள் செய்ய மாட்டார்கள். ஒரு கோடி வேலைவாய்ப்பு பற்றி பேசுகிறார்கள். இந்த முறை இதுபோன்ற பொய்யர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

பீஹார் மாநிலம் அரசியல் ரீதியாக உணர்வுகள் உள்ள மாநிலம். வறுமை, வேலையின்மை இருக்கலாம், ஆனால் அரசியல் ரீதியாக எல்லோரும் புத்திசாலிகள். எப்போது, எப்படி, யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு கார்கே பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;

மகளிர் வங்கிக் கணக்குகளில் 10,000 ரூபாயை நிதிஷ்குமார் டெபாசிட் செய்திருக்கிறார். எனவே தங்களுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று அவர்கள் எண்ணுகின்றனர். பீஹார் மக்கள் புத்திசாலிகள். 10,000 ரூபாயை மறந்துவிடுவார்கள். நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் யோசித்த பிறகு வாக்களிப்பார்கள்.

மகளிருக்கு 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகளாக அவர்களின் மனதில் தோன்றவில்லையா? தேர்தல் வாக்குறுதிகள் என்று கூறி பிரதமரும், நிதிஷ்குமாரும் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

இவ்வாறு கார்கே பேட்டியளித்தார்.

Advertisement