பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்!

5


ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாதிகள், தங்களிடம் இருந்த 3 பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைத்தனர். பதிலுக்கு பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.


மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டின்படி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, சண்டை தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.


போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் வசம் இருந்த பிணைக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலும் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது. கொல்லப்பட்ட 28 பிணைக்கைதிகளில், 17 பேரின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். இன்னும், 8 உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை.


தற்போது, 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. இந்த உடல்கள் நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு ஒருமுறை, ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஹமாஸ் அனுப்பி வைக்கிறது. ஆனால், விரைந்து உடல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது. தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்களை டி.என்.ஏ., சோதனை செய்து பார்த்த பிறகு, 'அவை பிணைக்கைதிகள் உடல்கள் இல்லை' என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது.

காசா முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளதால், உடல்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் பணி சிக்கலாக உள்ளது என ஹமாஸ் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement