ஊழல் நிறைந்த தலைவருக்கு ஓட்டளிக்காதீங்க: பிரசாந்த் கிஷோர் பேச்சு

3

பாட்னா: ஊழல் நிறைந்த தலைவருக்கு ஓட்டளிக்க கூடாது என தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.


பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.


இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணி களிடையே பலத்த போட்டி நிலவுகிறது. புது போட்டியாளராக, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கி இருக்கிறது. இந்த கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் சிவான் மாவட்டத்தில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: ஊழல் நிறைந்த தலைவருக்கு ஓட்டளிக்க கூடாது என்று நான் மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஜன் சுராஜ் வேட்பாளரை நீங்கள் விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஒரு ஊழல் நிறைந்த நபருக்கு ஓட்டளித்தால், அது உங்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும்.


எந்த மதமாக இருந்தாலும் சரி, வேட்பாளர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர், அவர் ஊழல் நிறைந்தவராக இருந்தால், அவருக்கு ஓட்டளிக்க கூடாது. மாறாக ஊழல் செய்யாத தலைவர் வெற்றி பெற வேண்டும். நீங்கள் ஒரு நல்ல நபரைத் தோற்கடித்தால், அது நூற்றுக்கணக்கான நல்லவர்களின் மன உறுதியை பாதிக்கும்.


மேலும் நீங்கள் ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுத்தால், அது நூற்றுக்கணக்கான ஊழல்வாதிகளின் மன உறுதியை அதிகரிக்கும் என்று நான் எப்போதும் கூறுவேன். பாஜ அரசு போகப் போகிறது, ஆனால் லாலு யாதவின் மகன் முதல்வராவாரா என்பதை பீஹார் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

லாலு யாதவ் இங்கு முடிவெடுக்கும் ராஜா அல்ல. ராகுலும், பிரதமர் மோடியும் பீஹார் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. அவர்கள் இங்கு வரும்போதெல்லாம் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வார்கள். பிரதமர் மோடியோ அல்லது ராகுலோ பீஹாரில் வேலைவாய்ப்பு பற்றிப் பேசுவதில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

Advertisement