தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மஹா ஸம்ப்ரோஷணம்; 30 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்

சிதம்பரம்: சிதம்பரத்தில், 30 ஆண்டுகளுக்கு பின் நடந்த தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், உலகளவில் சிறப்பு பெற்ற நடராஜர் கோவில் வளாகத்தில், புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது, 108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசம்.

சைவ கோவிலான நடராஜர் சன்னிதி, வைணவ கோவிலான தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி ஆகியவற்றை, பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசிக்கலாம். இங்குள்ள மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்தில் உள்ளார். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 30 ஆண்டுகளுக்கு பின் நேற்று கோவிலில் மஹா ஸம்ப்ரோஷணம் நடந்தது.

இதற்காக தலைக்காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது.கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை, 8ம் கால யாகசாலை பூஜையும், புன்ய ஹோமம், நித்யஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, புனிதநீர் ஊர்வலமாக கொண்டு சென்று, கோவில் விமான கலசங்களில் பட்டாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, கோவிந்தா கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர்.

Advertisement