வைகை அணையில் நீர்மட்டம் குறைந்ததால் 58 கிராம கால்வாயில் வெளியேறாத தண்ணீர் விவசாயிகள் கவலை

உசிலம்பட்டி: வைகை அணையில் நீர்மட்டம் குறைந்ததால் 58 கிராம கால்வாய் மதகில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் குறைந்து போனது. மீண்டும் 69 அடிக்கு உயர்ந்தால் மட்டுமே தண்ணீர் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி நீராதார திட்டமான 58 கிராம கால்வாயில் கடந்த அக்.29ல், தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது வைகை அணையில் 69 அடிக்கும் கூடுதலாக நீர்மட்டம் இருந்தது. கால்வாயின் மதகின் உயரம் 67 அடியில் உள்ளது. 68 அடிக்கும் மேலே இருந்தால் தான் கால்வாய் திறக்கப்படும்போது தண்ணீர் வெளியேறும் சூழல் உள்ளது. தற்போது சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வைகை ஆற்றிலும், பிரதான கால்வாய் பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், போதுமான மழை வைகை பெரியாறு அணை பகுதிகளில் அடுத்தடுத்து கிடைக்காமல் போனதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அணையில் நீர்வரத்து குறைந்த நிலையில் 58 கிராம கால்வாயின் மதகுகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தும் போதுமான அழுத்தம் இல்லாமல் தண்ணீர் வெளியேறாமல் உள்ளது. வினாடிக்கு 150 கன அடிநீர் திறக்கப்பட்டு 27.635 கி.மீ., பிரதான கால்வாய் கடந்து, வலது, இடது கால்வாய்கள் மூலம் கடைமடை பகுதிக்கு கால்வாய் தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் கிடைத்த பருவமழை போல் இந்த ஆண்டு உசிலம்பட்டி பகுதிக்கு கிடைக்காத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைய துவங்கியுள்ளது. கால்வாயில் தண்ணீர் வந்தால் சமாளித்து விடலாம் என்றிருந்த விவசாயிகளுக்கு இந்த சூழல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள், கால்வாயின் மதகு பகுதியில் இருந்து வினாடிக்கு 90 கன அடிக்கும் குறைவான அளவே தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் போதுமான வேகத்தோடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு ஓரிரு நாட்களில் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் மீண்டும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. அப்போது கால்வாயில் தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement