பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி: லோக்சபா ஒத்திவைப்பு

21


புதுடில்லி: பார்லிமென்டில் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார்.


பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணி, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு உட்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் இன்று (டிச 12) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும், காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது குறித்து லோக்சபா எம்பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா பேசுகையில் தெரிவித்தனர்.



பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா அமைதியாக இருக்குமாறு எம்பிக்களிடம் கேட்டு கொண்டார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால், அவையை 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.


மீண்டும் அவை 12 மணிக்கு கூடியது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


பின்னர் மீண்டும் 12 மணிக்கு ராஜ்யசபா கூடி நடந்து வருகிறது. அவையை ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.

Advertisement