பலாத்கார வழக்கு: மாஜி எம்.எல்.ஏ., ஆயுள் தண்டனை நிறுத்தம்

புதுடில்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டில்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.


உ.பி.,யின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் செங்கர் வேலை வாங்கி தருவதாக கூறி கடத்திச் சென்று, 2017ல் பலாத்காரம் செய்தார்.


இந்த சம்பவத்துக்கு பின் போலீஸ் நடவடிக்கை இல்லாததால், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு முன் சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அப்போது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.


அதன் பின், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீஸ் காவலில் உயிரிழந்தார். சிறுமி சென்ற கார் மீது லாரி மோதியது. இதனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை டில்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது. சி.பி.ஐ., விசாரித்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019ல் குல்தீப் செங்கரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.


கடந்த 2018ல் விசாரணை துவங்கியது முதல் குல்தீப் செங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது உடல்நிலை காரணமாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தண்டனையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் அமர்வு, மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால், குல்தீப்பின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அவர் டில்லியை விட்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

Advertisement