மருத்துவமனையில் 8 மணி நேரம் காத்திருப்பு: கனடாவில் இந்திய வம்சாவளி இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

புதுடில்லி: கனடா மருத்துவமனையில் சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தியர் பிரசாந்த் ஸ்ரீகுமார் 44, எட்மண்டனில் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அன்று, தான் பணியில் இருந்த போது திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது. அதில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறி அவருக்கு டைலனால் என்ற மாத்திரை வழங்கப்பட்டு காத்திருப்பு அறையிலே வைக்கப்பட்டார்.


காத்திருப்பு அறையில் 8 மணி நேரம் காத்திருந்த பிரசாந்த் ஸ்ரீகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போது தனது நிலை குறித்து அவரது தந்தையிடம், என்னால் வலியை தாங்கமுடியவில்லை என்று கதறி உள்ளார்.

அதை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் உள்ளே வரும்படி அழைக்கப்பட்ட 10 வினாடிகளில் நெஞ்சைபிடித்தபடி அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் குறித்து பிரசாந்த் மனைவி, விவரித்து கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வீடியோவில், பிரசாந்தின் ரத்த அழுத்தம் 210 ஆக உயர்ந்திருந்த போதிலும், அவருக்கு டைலனால் மாத்திரை மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறுவது தெரிகிறது.


மேலும் கனடாவின் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துப் பிரசாந்தின் குடும்பத்தினர் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement