பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை

1

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்திலுள்ள சகபாத் காவல் எல்லை மற்றும் கஞ்சம்-கந்தமால் எல்லைப் பகுதியில் உள்ள ரம்பா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து,ஒடிசா போலீஸ் சிறப்பு செயல்பாட்டுக் குழு , மத்திய இருப்புப் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 23 குழுக்கள் இணைந்து தேடுதல் வேட்டையை நடத்தின.
இந்த தேடுதல் வேட்டையில் இன்று காலை ரூ.1.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் கணேஷ் உய்கே 69, உட்பட 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் உய்கே,சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்திய கமிட்டி உறுப்பினர் மற்றும் ஒடிசா மாநில செயல்பாடுகளின் தலைவராக இருந்தவர். மேலும் இரண்டு பெண்களும் இதில் அடங்குவர்.


பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவன் கணேஷ் உய்கேவுக்கு பக்கா ஹனுமந்து, ராஜேஷ் திவாரி, சம்ரு மற்றும் ரூபா போன்ற பல பெயர்கள் உண்டு.சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகள்,303 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவரது மரணம் மாவோயிஸ்ட் அமைப்பின் முதுகெலும்பை உடைத்துள்ள தீர்க்கமான வெற்றி.
இவ்வாறு பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறினர்.


அமித்ஷா பாராட்டு:2026 மார்ச் 31-க்குள் நாட்டில் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் இது ஒரு "முக்கிய மைல்கல்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement