டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

1

புதுடில்லி: ''டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தை உருவாக்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது,'' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.


டிஆர்டிஓ என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் போர் வாகனங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.

டிஆர்டிஓவின் 68வது நிறுவன தினத்தன்று, அந்த அமைப்பின் விஞ்ஞானிகளை பாராட்டி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: டிஆர்டிஓ தினத்தன்று, அனைத்து விஞ்ஞானிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அறிவியல் ரீதியான பணிகள் உள்ளிட்டவை இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தை உருவாக்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது.


எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், டிஆர்டிஓ நமது பாதுகாப்பு படைகளின் நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது. தேசத்திற்கு தொடர்ச்சியான சேவையுடன் கூடிய ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement