ஆசிரியர்களை வாட்டி வதைக்காதீர்கள்; போராட்டத்துக்கு சீமான் ஆதரவு

2

சென்னை: நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களை வாட்டி வதைக்காமல் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?


ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும், 2024, 2025ம் ஆண்டுகளில் முன்னெடுத்த போராட்டங்களின் போதும் நேரில் சென்று ஆதரவளித்தேன்.
ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.


ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 15 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சி அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக எத்தனை அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் தங்களின் நியாயமானக் கோரிக்கைகள் வெல்ல கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது.


நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement