தீபத்துாணில் அரசு தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நாங்கள் ஏற்றுவோம்; ஹிந்து முன்னணி தலைவர் ஆவேசம்

8


மதுரை: ''திருப்பரங்குன்றம் மலையில், தமிழக அரசு தீபம் ஏற்ற தவறினால், ஹிந்து முன்னணியும், முருக பக்தர்களும் மலையில் தீபம் ஏற்றுவோம்,'' என, ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.


திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, மதுரையில் உயிரிழந்த பூர்ணசந்திரனின் 16 ம் நாள் துக்க அனுசரிப்பு நடந்தது. இதில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், காடேஸ்வரா சுப்ரமணியம் அளித்த பேட்டி: முருகனுக்காக பூர்ணசந்திரன் தன் உடலையே தீபமாக எரித்து உள்ளார். அவரது குடும்பத்தினர் தி.மு.க.,வினர். ஆனால், தி.மு.க., சார்பில் யாரும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. கடவுள் இல்லை என்று கூறிய, ஈ.வெ.ரா., சிலை முன்பு உயிரை தியாகம் செய்து உள்ளார். அவரது தியாகம் வீண் போகாது.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றத் தவறினால், ஹிந்து முன்னணியும், முருக பக்தர்களும் சேர்ந்து மலையில் தீபம் ஏற்றுவோம்.


விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூ., எம்.பி., வெங்கடேசன் ஆகிய இருவரும் நக்சலைட் சிந்தனை கொண்டவர்கள். கோவில்கள், ஹிந்து கடவுள்கள், ஹிந்து பெண்கள் குறித்து அவதுாறு பேசிய திருமாவளவன், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை பற்றி பேசுவதில்லை. தி.மு.க., - எம்.பி., கனிமொழி தீபத்துாணை அளவைக்கல் எனக்கூறி முருக பக்தர்களை கொச்சைப்படுத்துகிறார்

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement