கோவை, தேனி, தென்காசி, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: கோவை, தேனி, தென்காசி மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 02) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜனவரி 02) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


கோவை, தேனி, தென்காசி மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 02) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement