நிதி மேலாண்மையை தமிழக அரசு எப்படி கடைபிடிக்க போகிறது: கேட்கிறார் சீமான்

5


காரைக்குடி: தமிழகத்தில் ஏற்கனவே நிதி மேலாண்மையின்றி ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துள்ள நிலையில், தற்போது எப்படி நிதி மேலாண்மையை சமாளிக்க போகிறார்கள் என தெரியவில்லை என காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டாக போராடி வந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தேர்தலின் போது மட்டுமே ஓய்வூதிய அறிவிப்பு செய்துள்ளனர். இது ஆளும் அரசின் ஓட்டு அறுவடையை நோக்கி தான் என்பதை காட்டுகிறது. அரசு ஊழியர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், முன்பே அறிவித்திருக்க வேண்டும்.


முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியது போல் பெரிய நிதிச்சுமை தான் ஏற்படும். துாய்மை பணியாளர்கள் நீண்ட நாட்கள் போராடி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன. மாற்று பொருளாதார பெருக்கம் இல்லை.


அரசுக்கு வரி, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தான் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மக்களை சுமைக்குள்ளாகியுள்ளது. ரூ.10லட்சம் கோடி கடன் பெற்றும், மாநிலத்தில் எந்தவித திட்டமும் சிறப்பாக நிறைவேறவில்லை.


பெண்கள் மாதம் ரூ.1000 கேட்டு வீதியில் போராடவில்லை. இது ஓட்டுக்களை பறிக்கும் நுட்பமாக தான் பார்க்கிறேன். எந்த கருத்து கணிப்பும் ஓட்டாக போவதில்லை. புதிதாக நாட்டை உருவாக்க நினைக்கிறோம். வடமாநில இளைஞர்கள் வருகையும், போதை பொருள் வரக்காரணமாக உள்ளது. மருத்துவமனையில் டாக்டர்கள் மது அருந்தியது பெரிய குற்றமில்லை. ஏனென்றால் அரசே மதுபானம் விற்கிறதே? இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement