ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் டிஜிபி நியமனத்தில் தாமதம்;இபிஎஸ் குற்றச்சாட்டு

9

சேலம்: ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற காரணத்திற்காக, தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி நியமனத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நியாயமா?



சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. ஸ்டாலின் தமிழகத்திற்கு முதல்வராக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்தை ஆள்வது அதிமுக தான். நாட்டு மக்கள் நன்மை பெறுவதற்காக தான் ஒரு ஆட்சி அமைகிறது. ஆனால், 8 கோடி மக்களிடம் சுரண்டி, ஒரு குடும்பம் செல்வ செழிப்போடு வாழுகிறது. இது நியாயமா?

நாலே முக்கால் ஆண்டு காலம் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு, இப்போது தான் மக்களை பற்றி யோசிக்கிறார்கள். அதுவும் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். தமிழகம் இன்று போராட்டக்களமாக மாறி விட்டது. உங்கள் ஆட்சியில் நல்லது செய்திருந்தால், எதுக்கு போராட்டம் நடக்கிறது?

ஒப்பிட்டு பாருங்க



லஞ்சம், கொள்ளை அடிப்பதில் சிறந்த ஆட்சியை அமைத்துள்ளது திமுக. மக்களுக்கு நன்மை கிடைப்பதில் சிறந்த ஆட்சியல்ல. எந்தெந்த வழிகளில் ஊழல் செய்வது, மக்களை எப்படி சுரண்டுவது என்பதில் திமுக சிறந்த ஆட்சி. திமுக மற்றும் அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள்.

தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சமூகநலத்துறை அமைச்சர், தமிழகத்தில் 6,999 போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.104 கோடி நிவாரணம் வழங்கியதாக சொல்கிறார். அப்படியென்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். சிறுமிகளுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது. எந்த அளவுக்கு கொடுமையான ஆட்சி என்பதை சிந்தித்து பாருங்கள். தமிழக மக்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை.

பயம்



மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான், அந்த மாநிலத்தின் வளர்ச்சி கூடும். ஆனால், இங்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அஞ்சி அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதால், இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சி தேவையா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கக் கூடிய டிஜிபி இதுவரையில் நியமிக்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தி விட்டேன். சூடு, சொரணை, வெட்கம், மானம் ஏதுமில்லாத முதல்வருக்கு நாட்டு மக்களின் நலன்கள் பற்றி கவலையில்லை. ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற காரணத்திற்காக, டிஜிபி நியமிக்கப்படவில்லை.

குடும்பம்



சாதாரண கட்சி தொண்டன் கூட அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகலாம். ஆனால், திமுகவில் அப்படியில்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்ததாக இன்பநிதியும் இருக்கின்றனர். கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக உதயநிதி துணை முதல்வரானார். மூத்த அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை. அதனால், அவர் துணை முதல்வராக்கப்படவில்லை.

180 நாட்களாக...



நிதியில்லை, நிதியில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூப்பாடு போடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டுவர நிதி கிடையாது. கார் பந்தயம் நடத்துவதற்கு நிதி இருக்கிறது. கார் பந்தயம் நடத்த யாராவது கேட்டார்களா?. எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க, அரசுப் பணம் ரூ.82 கோடியை செலவு செய்கிறார்கள். அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள். மகளிர் சுயநிதி எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியை இவர்கள் சுருட்டுவதற்காகத் தான் ஆய்வு என்ற பெயரில் நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். அதிமுக ஆட்சியமைந்தால் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

அதிமுகவுக்கு கூட்டணி இல்லை என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். பொருத்திருந்து பாருங்கள். 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பச்சைப் பொய்யை ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தப்பட்டதை, 180 நாட்களாக உயர்த்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement