தடுப்பு கட்டையில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது வாலிபர் பலி; 15 பயணிகள் காயம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்புக்கட்டையில் மோதி, தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு டி.என்.90.பி.9999 பதிவு எண் கொண்ட 'வேங்கை'ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாலாண்டியூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் குமார், 33; டிரைவர் ஓட்டிச்சென்றார். பஸ்சில், 16 பயணிகள் இருந்தனர்.

பஸ் நேற்று காலை 4:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை திருநாவலுார் அடுத்த பாதுார் கூட்ரோடு அருகே சென்றபோது, டிரைவரின் கவன குறைவால் சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டை மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஸ்சில் பயணித்த பயணிகள் மரண ஓலம் எழுப்பினர். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், நாமக்கல் மோகனுாரை சேர்ந்த அலாவுதீன் மகன் ஜியாவுதீன், 25; உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். டிரைவர் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 15 பயணிகளும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தால் திருநாவலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் மூலம் பஸ் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement