நான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வேன்: மம்தா அறிவிப்பு

21

கோல்கட்டா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் தொடர்பாக நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். நான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் தான் என மேற்குவங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.



தெற்கு 24 பர்கானாஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பேசியதாவது: வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதற்கும், பலர் இறந்ததற்கும் எதிராக நாளை நாங்கள் நீதிமன்றத்தை நாடுகிறோம். அனுமதிக்கப்பட்டால், நான் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு சாதாரண பிரஜையாக வாதாடுவேன். நானும் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் தான். இந்த விவகாரம் தொடர்பாக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்.


யாராவது தங்கள் வயதான பெற்றோரை தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வரிசையில் நிற்க வைத்தால் பாஜக தலைவர்கள் எப்படி உணருவார்கள்? எஸ்ஐஆர் பணி தொடங்கியதில் இருந்து பலர் பயத்தால் இறந்துவிட்டனர், மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேற்கு வங்கத்தில் எந்தவொரு வக்ப் சொத்துக்களையும் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டேன். அநீதிக்கு காரணமானவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். பாஜ எந்த மதத்தையும் நம்பவில்லை. பொய்களைப் பரப்புவதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு முதல்வர் மம்தா பேசினார்.

Advertisement