'அடுத்த ஓராண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி'

புதுடில்லி: அடுத்த ஓராண்டுக்குள் நாடு முழுதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ., திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று துவக்கி வைத்தார்.

டில்லியில் அடுத்த மாதம் 'ஏ.ஐ., இம்பேக்ட்' உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ராஜஸ்தானில் நேற்று நடந்த மண்டல ஏ.ஐ., உச்சி மாநாட்டில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

இளைஞர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிலிலும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

இதற்காகவே, அடுத்த ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ., திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 5ஜி சேவை மற்றும் செமிகண்டக்டர் துறையை தொடர்ந்து, ஏ.ஐ., பயிற்சியும் மிக வேகமாக செயல்படுத்தப்படும். இந்த தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் குறைந்த செலவில் பயன்படுத்த ஏதுவாக 38,000 சிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் பேசினார்.

இந்தியாவில் ஏ.ஐ., மற்றும் தரவு மையங்களில் கிட்டத்தட்ட 6.30 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்யப்படுகின்றன

Advertisement