பச்சை மிளகாயில் ஊடு பயிராக அகத்தி பயிரிடுவதில் ஆர்வம்

போடி: போடி பகுதியில் பச்சை மிளகாயில் ஊடு பயிராக அகத்தி கீரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போடி அருகே விசுவாசபுரம்,பத்திரகாளிபுரம், சிலமலை, அம்மாபட்டி, ராசிங்கபுரம், தேவாரம் அருகே பொட்டிப்புரம், ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளனர்.

பச்சை மிளகாய்க்கு சில நேரங்களில் விலை இல்லாமல் போனால் பாதிப்பை சரிக்கட்டும் வகையில் ஊடுபயிராக அகத்தி கீரை சாகுபடி செய்கின்றனர்.

நன்கு வளர்ந்த பின், அதனை வெட்டி புதைத்து உரமாக்குகின்றனர். இதனால் அடுத்து சாகுபடி பயிர்களுக்கு அதிக மகசூல் தருகின்றன. விவசாயிகள் அகத்தி குச்சிகள், கீரைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனையும் செய்கின்றனர்.

கூடுதல் வருவாய் விவசாயிகள் கூறுகையில் : பச்சை மிளகாய், பருத்தி பயிரிடும் போது உரிய மழை கிடைக்காத நிலை ஏற்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் எப்போதும் பலன் தரக்கூடிய வகையில் பச்சை மிளகாய் அகத்திக்கீரை பயிரிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பருத்திக்கு ஊடு பயிராகவும், உரத்திற்காகவும் அகத்தி கீரைகளை நடவு செய்து வருகின்றோம் என்றனர்.

Advertisement