பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேம்பாட்டு பணிகள்...தீவிரம்: கூடுதல் படகுகளை இயக்க பயணிகள் கோரிக்கை

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், 3 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகளுடன்,இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளன.

கடந்த, 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் பிச்சாவரம் படகு குழாம்துவக்கப்பட்டது. அங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் தாவரங்களை படகில் பயணம் செய்து கண்டுகளிப்பது, வித்தியாசமான அனுபவம் என்பதால், குழந்தைகள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரையும், இந்த சுற்றுலா மையம் வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டுவருகிறது. சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்,பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக,ரூ. 10 கோடி மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் இங்கு, நடந்து வருகிறது.குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகனநிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைப்பாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள்நிழற்குடை, டிக்கெட் கவுண்ட்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

பிச்சாவரம் சுற்றுலா வளாக ஒரு பகுதியில் தற்போது, கார் பார்க்கிங் வசதி பணி முடிந்துள்ளது. மேம்பாட்டு பணிஇன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்பதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

கூடுதல் படகுகள் இயக்க கோரிக்கை

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட, கூடுலாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு வருகின்றனர்.

போதுமான படகு வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செல்கின்றனர்.

மேலும், படகுகள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

இதனால், பல கி.மீ., தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கூடுதல் படகுகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement