பாஜவுடன் கூட்டணி: மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்

1

மும்பை: அம்பேர்நாத் நகராட்சியில் பாஜவுடன் கூட்டணி அமைத்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்களை, மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைமை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.


கடந்த டிசம்பரில் நடைபெற்ற 288 நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி (பாஜ, சிவசேனா, என்சிபி) 207 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைக் கைப்பற்றியது.
60 உறுப்பினர்களைக் கொண்ட அம்பேர்நாத் நகராட்சியில், சிவசேனா 27 இடங்களையும், பாஜ 14 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும், என்சிபி நான்கு இடங்களையும், இரண்டு சுயேச்சைகள் தலா ஒரு இடத்தையும் வென்றனர்.


இந்த நிலையில் 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பாஜவுடன் சேர்ந்தனர். இதனையடுத்து, பாஜ-- காங்கிரஸ்--என்சிபி கூட்டணி ஒரு சுயேச்சையின் ஆதரவுடன் பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்தது. இதன் விளைவாக, இன்று பாஜ கவுன்சிலர் தேஜஸ்ரீ கரஞ்சுலே பாட்டீல் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கணேஷ் பாட்டீல், மாநிலத் தலைமைக்குத் தெரியாமலும் அதன் ஒப்புதல் இல்லாமலும் பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்காக, அம்பர்நாத் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பிரதீப் பாட்டீலை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலத் தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்டதால், காங்கிரஸ் கட்சி இந்த கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisement